கிழக்கு மாகாண நிலங்களைப் பாதுகாக்க விசேட குழு – அமைச்சரவை ஒப்புதல்
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு, அங்கீகரிக்கப்படாத நில மீட்சி மற்றும் சட்டவிரோத கடற்கரை கட்டுமானங்களைத் தடுப்பதற்காக, 'கிழக்கு மாகாண நிலப் பாதுகாப்புக் குழு' ஒன்றை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகள், அங்கீகரிக்கப்படாத நில மீட்சிகள் மற்றும் சட்டவிரோத கடற்கரை கட்டுமானங்கள் குறித்து அரசாங்கம் கடும் கவலை தெரிவித்துள்ளது.
குறிப்பாக அரசியல் செல்வாக்கையும் அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் இந்தச் சட்டவிரோத நடவடிக்கைகள், கிழக்கு மாகாணத்தில் கடுமையான சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக பிரச்சினைகளை ஏற்படுத்தியுள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், இந்த மனித நடவடிக்கைகள் கிழக்கு கடற்கரையில் கடுமையான கடல் அரிப்பையும், சுற்றுச்சூழல் சீர்கேட்டையும் ஏற்படுத்தி வருகின்றன. உள்நாட்டு மோதல் முடிவடைந்து 16 ஆண்டுகள் கடந்தும் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிரந்தர குடியேற்றத் திட்டம் அமல்படுத்தப்படாதது, நிர்வாகக் கட்டமைப்பில் விலகல்கள் ஏற்பட்டிருப்பது ஆகியவை பிராந்திய அபிவிருத்தி மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதித்துள்ளதாகவும் அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
இந்தச் சவால்களுக்கு விரைவான நிரந்தர தீர்வுகளைக் கண்டறிதல், சட்ட நடவடிக்கைகளை அமல்படுத்துதல் மற்றும் நிறுவன ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன், 'கிழக்கு மாகாண நிலப் பாதுகாப்புக் குழு' (Protection of Eastern Province Lands) என்ற பெயரில் ஒரு விசேட குழுவை நியமிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உள்ளூர் அரசாங்க ஆணையாளரும், முன்னாள் தெற்கு மாகாண நில ஆணையருமான செனக பள்ளியகுருகே தலைமையில் அமையும் இக்குழுவில், சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இடம்பெறுவார்கள். மேலும், சட்டவிரோத நில ஆக்கிரமிப்பு மற்றும் மீட்சி நடவடிக்கைகளைத் தடுக்க, பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) தலைமையில் ஒரு சிறப்பு சட்ட அமலாக்கப் பிரிவும் நிறுவப்படும்.
பாதுகாப்புப் படையினருக்கு முழு அதிகாரங்கள் வழங்கப்பட்டு, அரசியல் பின்புலம் உள்ளவர்கள் உட்பட அனைத்து சட்டவிரோத நில ஆக்கிரமிப்புகளையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேநேரம், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அல்லது அதற்கு முன்னதாக மகாவலி அதிகாரசபையால் ஒதுக்கப்பட்ட நிலங்களில் இதுவரை எந்தவொரு அபிவிருத்தித் திட்டமும் அமல்படுத்தப்படாத நிலங்கள், உடனடியாக அரசாங்கத்தால் மீட்டெடுக்கப்படும். இந்த நிலங்கள், உள்ளூர் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக பிரதேச செயலாளர்களுக்கு மறுபகிர்வு செய்யப்படும்.
கிழக்கு கடற்கரையின் உயர் சுற்றுலாத் திறனைப் பயன்படுத்தி, கடற்கரை சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான ஒழுங்கான திட்டத்தை விரைவாக உருவாக்கவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. கிழக்கு கடற்கரையில் இயங்கும் ஹோட்டல்கள் தொடர்பான சட்டங்களை அதிகாரிகள் பாரபட்சமின்றியும், வெளிப்படைத்தன்மையுடனும் அமல்படுத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையும் வடிவமைக்கப்படும்.